பொம்மிடி அருகே உள்ள விடிவெள்ளி நகரை சேர்ந்த அசோக்குமார் (வயது 35). சொந்தமாக வாடகை கார் ஓட்டி வருகிறார். இவரது மனைவி மவுனிகா (28). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயத்தில் சபரி என்கிற மகன் உள்ளான். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மவுனிகா கணவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு அடிக்கடி சென்றுவிடுவார். அசோக்குமார் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சென்று சமாதானம் பேசி மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையால் மவுனிகா காவல் துறையில் புகார் அளித்தார், புகாரின் பேரில் கணவன்-மனைவியை பொம்மிடி நகர போலீசார் அழைத்து சமரசம் செய்து அனுப்பியுள்ளனர். வீட்டுக்கு வந்த மவுனிகா நேற்று முன்தினம் இரவு மின் விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொம்மிடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மவுனிகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார், மவுனிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக