பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய பேச்சு போட்டி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 அக்டோபர், 2023

பொறியியல் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய பேச்சு போட்டி.


திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தைக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகத் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்காகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது.

கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விஷயங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் இந்த மாதிரியான பேச்சு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த வகையில் தர்மபுரி மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இன்று பொறியாளர்களுக்கான  பேச்சு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் மாணவருக்கு முதல் பரிசாக  ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட உள்ளது.


இந்நிகழ்ச்சிக்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி  தலைமை தாங்கினார். தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சின்னசாமி வரவேற்புரையாற்ற, பொறியாளர் அணி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,  மாவட்ட துணை அமைப்பாளர்கள் சங்கர், செல்வம், சீனிவாசன், சூர்யா, சரவணகுமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநில வர்த்தக அணி துணை செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான தர்மச்செல்வன், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வைகுந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சாளருமான அசோகன், சிலம்பரசன், ராஜு ஆகியோர்  செயல்பட்டனர். பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் உதயகுமார் நன்றி உரையாற்றினார்.


மேலும் நிகழ்ச்சியில் திமுகவின் மாவட்ட அவை தலைவர் செல்வராஜ், நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணை தலைவரும், தர்மபுரி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளருமான பெரியண்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுமணி, சோலைமணி, ஒன்றிய செயலாளர் ஏரியூர் செல்வராஜ், மடம் முருகேசன், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, ஏரியூர் ஒன்றிய கவுன்சிலரும், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளருமான சென்னையன், மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.


- க.மோகன்தாஸ், தர்மபுரி. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad