காரிமங்கலத்தில், இனிப்பு காரம் தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடிர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 7 நவம்பர், 2023

காரிமங்கலத்தில், இனிப்பு காரம் தயாரிப்பு இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடிர் ஆய்வு.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் அவர்கள் வழிகாட்டல் படி, மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு விதிமுறைகள் படி நடைமுறை பின்பற்றப்படுகின்றனவா எனவும், இல்லாத பட்சத்தில் உரிய  நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 


அதன் அடிப்படையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால், காரிமங்கலத்தில் மொரப்பூர் ரோடு, பைபாஸ் சாலை, அகரம் பிரிவு ரோடு, தர்மபுரி ரோடு, பேருந்து நிலையம் பகுதி, பாலக்கோடு காரிமங்கலம்‌ சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தார். ஆய்வில் ஒரு சில தயாரிப்பு கூடங்கள் மற்றும் பேக்கரிகளில் இருந்து பலமுறை பயன்படுத்திய சமையலெண்ணெய் நான்கு லிட்டர், அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட கார, இனிப்பு வகைகள் சுமார் 22 கிலோ மற்றும் காலாவதியான குளிர்பானங்கள், உரிய விபரங்கள் அச்சிடாத கார்ன்பிளார் பவுடர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தி அழிக்கப்பட்டது. 


மேற்படி கடை  உரிமையாளர்களுக்கு தலா ஆயிரம் வீதம் நான்கு கடைகளுக்கு உடனடி அபராதம் மாவட்ட நியமன அலுவலர் பரிந்துரை பேரில் 4000 விதிக்கப்பட்டது. மேலும்  உரிய சுகாதாரம் காணப்படாத, பராமரிக்காத இரண்டு கடைகளுக்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் அளித்து  மூன்று தினங்களுக்குள் உரிய குறைபாடுகள் கலைந்து பதில் அறிக்கை புகைப்படத்துடன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.  


ஆய்வில் பணியாளர்கள் தன் சுத்தம், உரிய உடைகள், உறைகள் மற்றும் சுற்றுப்புற சுத்தம், தயாரிக்கும் மூலப் பொருட்கள் உரிய காலாவதி தன்மை உடையதாகவும், லேபிள் நடைமுறை பின்பற்றக் கூடியதாகவும் இருத்தல் குறித்தும், குடிநீர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆக இருத்தல் அவசியம் என கண்காணித்தல் உடன் தயாரித்த இனிப்பு, கார வகைகள் முறையாக பராமரிக்கப்படுதல் அவசியம் என அறிவுறுத்தல் விழிப்புணர்வு செய்யப்பட்டது. 


மேலும்  இனிப்பு கார  தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பின்பற்ற வேண்டிய உணவு பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை குறித்த பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அனைத்து  உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் முறையாக பெற்று புதுப்பித்தல் வேண்டும். புதுப்பிக்காதவர்கள் மற்றும் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, சான்றிதழ்கள் நுகர்வோர்  பார்வையில்படுமாறு மாட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டது.


மேலும் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad