தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யும் பொருட்டு ராகி சிறு தானியத்தை சிறு /குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வரப்பெற்றுள்ளது.
தருமபுரி வட்டம், தருமபுரி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும், அதனை தொடர்ந்து பென்னாகரம் வட்டத்தில், வண்ணாத்திப்பட்டி கிராமம், பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும், அரூர் வட்டத்தில், அரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும் வருகின்ற 19.12.2023 அன்று சிறு/குறு விவசாயிகளிடம் இருந்து ராகி கொள்முதல் செய்யப்பட உள்ளது.
எனவே தருமபுரி மாவட்டத்தில் ராகி பயிர் செய்து, அறுவடை செய்ய தயார் நிலையில் உள்ள விவசாயிகளும், ராகி இருப்பு வைத்துள்ள சிறு/குறு விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறு/குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் சாகுபடி செய்த ராகியை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து உரிய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஒளி நகல்கள் (Xerox copies) உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு ராகியை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம்.
விற்பனைக்கு கொண்டு வரும் ராகி சிறுதானியத்தை கல், மண் மற்றும் தூசி போன்றவற்றை நீக்கி சுத்தமாக கொண்டு வரவேண்டும். மேலும், அரசு நிர்ணயம் செய்த விற்பனை தொகை ராகி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3846/- (கிலோ ஒன்றுக்கு ரூ.38.46) என்ற அடிப்படையில் தங்களது வங்கி கணக்கில் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு செலுத்தப்படும். நேரடி கொள்முதல் நிலையங்கள் காலை 9.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் மாலை 2.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் செயல்படும்.
தமிழ்நாடு அரசின் இந்த வாய்ப்பினை ராகி சாகுபடி செய்த சிறு /குறு விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளவும், மேலும், நேரடி ராகி கொள்முதல் நிலையங்கள் குறித்து தகவல் அறிய விரும்பினால் மண்டல மேலாளர் அலைபேசி எண்: 9443938003, மண்டலஅலுவலக தொலைபேசி எண் 04342-231345 உள்ளிட்ட தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக