விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 22 டிசம்பர், 2023

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (22.12.2023) நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பர்-2023 திங்கள் வரையிலான காலத்திற்கு இயல்பான மழையளவு 942.00 மி.மீ ஆகும். தற்பொழுது வரை இந்த ஆண்டு 766.66 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 1,72,420 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் தற்பொழுது வரை 1,52,334 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.


2023-2024 ஆம் ஆண்டிற்கு நெல் வகைகளான ஆடுதுறை 39, வெள்ளைப்பொன்னி, ADT-53, CO-51, TKM-13, VGD-1 ஆகியவை 40.13 மெ.டன் இருப்பும், சிறுதானியங்களான ராகி, சோளம், சாமை, கம்பு, இதரதானியங்கள் 100.65 மெ.டன் இருப்பும், பயறு வகைகளான துவரை, உளுந்து, பச்சைபயறு, காராமணி, கொள்ளு, கொண்டகடலை ஆகியவை 17.69 மெ.டன் இருப்பும், எண்ணெய்வித்துக்களில் நிலக்கடலை 24.11 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.


வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கு 655.00 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதில், டிசம்பர்-2023 திங்கள் வரை 514.32 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், தருமபுரி மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 722.00 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 722.00 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது. தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 76,484 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 14,810 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 30,000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர்-2023 திங்கள் வரை 7,751 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 


16,643 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்குதேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் கடந்த 30.11.2023 வரை நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 36,482 விவசாயிகளுக்கு ரூ.330.58 கோடி பயிர்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம் தருமபுரி மாவட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திடவும், பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீடுகளை கால தாமதமின்றி வழங்கிடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆவின் பால் கொள்முதல் விலையினை உயர்த்தி வழங்கியதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தருமபுரி மாவட்ட விவசாய சங்க பிரதிநிநிதிகள் மற்றும் விவசாயிகள் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நன்றி தெரிவித்தனர். மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இராகி சிறுதானியம் வழங்கும் பொருட்டு, விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதலினை தொடங்கி வைத்ததற்கும், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2023-24ஆம் ஆண்டு அரவைப்பருவத்திற்கான கரும்பு அரவையினை முன்கூட்டியே தொடங்கி வைத்ததற்கும் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களுக்கும் விவசாய சங்க பிரதிநிநிதிகள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.


இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.ஆர்.பிரியா, வேளாண்மை இணை இயக்குநர் திரு.கிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.பாத்திமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.குணசேகரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad