பாலக்கோடு சுற்றுவட்டார விவசாயிகள் கோடை உழவு செய்து நன்மை பெற வேளாண்மை இயக்குனர் விவசாயிகளுக்கு வேண்டுகோள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

பாலக்கோடு சுற்றுவட்டார விவசாயிகள் கோடை உழவு செய்து நன்மை பெற வேளாண்மை இயக்குனர் விவசாயிகளுக்கு வேண்டுகோள்.


கோடை உழவு குறித்து பாலக்கோடு வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி அவர்கள் தெரிவிக்கிறார். சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பெய்யும் மழையானது கோடை மழை என்று அழைக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதனால் மண் இறுக்கம் நீக்கப்படுவது மட்டுமல்லாமல் மண்ணின் நீர் பிடிப்பு திறனும் அதிகரிக்கப்படுகிறது. மேலும் பயிரின் மகசூலும் 20 சதம் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோடை உழவினை சரிவுக்கு குறுக்காக உழ வேண்டும். இரண்டாவது உழவு குறுக்கு வசத்தில் இருக்க வேண்டும். இதனால் கோரை போன்ற கிழங்கு வகைகளை கட்டுப்படுத்தப்படுகின்றன.


நிலத்தில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், கூண்டு புழுக்கள் மற்றும் களை செடிகளின் விதைகள் நிலத்தின் அடிப்பகுதியிலிருந்து மேல் புறத்திற்கு கொண்டு வரப்படுவதால் அதிக வெப்பநிலை காரணமாக அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் சாகுபடி செய்யப்படும் அடுத்த பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக காணப்படும்.


மண்ணை புரட்டிவிடும் பொழுது முதலில் மண் வெப்பம் ஆகி பிறகு குளுமை அடையும். பெய்யும் மழை நீரானது நன்கு நிலத்தில் ஊடுருவி நிலத்தின் அடிபகுதிக்கு சென்று அடிப்பகுதியில் தங்கும் இதன் மூலம் நிலத்தின் ஈரப்பதம் காக்கப்படுகிறது.


எனவே விவசாயிகள் அனைவரும் இனி வரும் காலங்களில் பெய்ய இருக்கும் மழையினை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும் என பாலக்கோடு வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad