வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 மே, 2024

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.05.2024) நடைபெற்றது.


மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ம் தேதி அன்று காலை 8.00 மணிக்கு நடைபெற உள்ளது. 


இந்நிலையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம்  மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செட்டிக்கரையில் உள்ள தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள இருப்பு அறையில் சீல் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் மாதம் 4ம் தேதி செட்டிக்கரையில் உள்ள தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி வாக்கும் எண்ணும் பணி முழுவதும் பதிவு செய்யப்படும்.


தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பதிவான வாக்குகள் சட்டமன்ற வாரியாக மேற்கண்ட வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறவுள்ளது.  இதற்காக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தனித்தனியாக 14 மேசைகள், ஒவ்வொரு மேசைகளுக்கும் தனித்தனியாக CCTV கேமரா அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேசைக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் (Counting Supervisor), ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர் (Counting Assistant), மற்றும் ஒரு நுண்பார்வையாளர்(Micro Observer)  ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இப்பயிற்சியில்  102 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள்  மற்றும் 102 வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் என 220 அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேற்கண்ட பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.  மேலும், அனைத்து வாக்கு எண்ணும் அலுவலர்களும் உரிய அடையாள அட்டையுடன் குறித்த நேரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக வேண்டும் எனவும், கைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் எடுத்து வருவதை தவிர்க்குமாறும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணும் பணி சிறந்த முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும்  அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறித்தினார்.


வாக்கு எண்ணும் பணிகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறை, அலுவலர்களுக்கான காத்திருப்பு அறை, சிசிடிவி கேமராக்கள் அறை, குடிநீர்வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணிகளை எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


அதேப்போல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வாக்கு முடிவுகளை பதிவு செய்திட தேவையான கணினி, பிரிண்டர், பேப்பர் உள்ளிட்ட எழுதுபொருட்களை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உதவி தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


மேலும், செய்தியாளர் தகவல் மையத்திலிருந்து (media centre) செய்தி நிறுவனம் மற்றும் செய்தியாளர்களுக்கு 1 மணி நேரத்திற்கு 1 முறை வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்த விவரம், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் (Whatsapp) மூலம் உடனுக்குடன் அனுப்பி வைக்கவும், ஒவ்வொரு சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை விவரத்தை அறிவிக்க ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


இப்பயிற்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பிரகாசம், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) திரு.வெங்கடேசன், திரு.அ.சோக்குமார் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad