பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 மே, 2024

பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 ஜூன் மாதம் 4-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வாக்கு எண்ணும் அலுவலருக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வாக்கு எண்ணும் அலுவலருக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (22.05.2024) நடைபெற்றது.


மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ம் தேதி அன்று காலை 8.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, அரூர் பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் செட்டிக்கரையில் உள்ள தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.


தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் ஜூன் மாதம் 4ம் தேதி செட்டிக்கரையில் உள்ள தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தி வாக்கும் எண்ணும் பணி முழுவதும் பதிவு செய்யப்படும். தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பதிவான வாக்குகள் சட்டமன்ற வாரியாக மேற்கண்ட வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மேசைக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் (Counting Supervisor), ஒரு வாக்கு எண்ணும் உதவியாளர் (Counting Assistant), மற்றும் ஒரு நுண்பார்வையாளர் (Micro Observer) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சியானது இன்று நடைபெற்றது. 


காலை 11.00 மணி முதல் 01.00 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மேட்டூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும், பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு பிற்பகல் 03.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 102 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 102 வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் சுமார் 220 அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


மேற்கண்ட பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், அனைத்து வாக்கு எண்ணும் அலுவலர்களும் உரிய அடையாள அட்டையுடன் குறித்த நேரத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆஜராக வேண்டும் எனவும், கைபேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் எடுத்து வருவதை தவிர்க்குமாறும், மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடித்து வாக்கு எண்ணும் பணி சிறந்த முறையில் நடத்த தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறித்தினார்கள்.


வாக்கு எண்ணும் முறை உள்ளிட்டவை குறித்தும், கட்டுப்பாட்டு அறை, தயார் நிலையில் உள்ள அலுவலர்களுக்கான காத்திருப்பு அறை, சிசிடிவி கேமராக்கள் அறை, குடிநீர்வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணிகளை புகாருக்கு இடமளிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


அதேப்போல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வாக்கு முடிவுகளை பதிவு செய்திட தேவையான கணினி, பிரிண்டர், பேப்பர் உள்ளிட்ட எழுதுபொருட்களை தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் உதவி தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும், செய்தியாளர் தகவல் மையத்திலிருந்து செய்தி நிறுவனம் மற்றும் செய்தியாளர்களுக்கு 1 மணி நேரத்திற்கு 1 முறை வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்த விவரம், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் (Whatsapp) மூலம் உடனுக்குடன் அனுப்பி வைக்க மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


முன்னதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதின் இப்ராகிம், வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.வில்சன் ராஜசேகர், திருமதி.காயத்ரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.பிரகாசம், தனி வட்டாட்சியர்கள் (தேர்தல்) திரு.வெங்கடேசன், திரு.அ.சோக்குமார், அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad