75 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 ஜூன், 2024

75 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி உள்வட்டம், மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் 75 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி உள்வட்டம், மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் 75 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.12.00 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், இணையவழி பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அரசு உதவித்தொகைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.76,000/- மதிப்பில் நலிந்தோர் உதவித்தொகைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.29,500/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 விவசாயிகளுக்கு ரூ.91,513/- மதிப்பீட்டில் தக்காளி குழித்தட்டு நாற்றுகள் மற்றும் சொட்டுநீர் பாசன கருவிகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 விவசாயிகளுக்கு ரூ.95,112/- மதிப்பீட்டில் நுண்ணுயிர் பாசனம் மற்றும் பண்ணைக் கருவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.54 இலட்சம் மதிப்பீட்டில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், மகளிர் திட்டம் சார்பில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் 9 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.108 இலட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மூலம் உதவித்தொகைகள் என மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ. 1.26 கோடி (ரூ.1,26,96,485/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்.


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் வருவாய்த்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மகளிர் திட்டம், சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.


இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், பெரியவர்களுக்கும், பெண்களுக்கும், தாய்மார்களுக்கும், பொது மக்களுக்கும், நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாகவும் இந்த நகரப்பகுதிக்கு இணையான சேவைகள், அடிப்படை வசதிகள் மலை கிராம மக்களுக்கு கிடைக்க முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் மிட்டாரெட்டிஅள்ளி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகின்றது.


இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். மேலும், தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் விளக்க கையேடுகள் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் தயாரித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் மக்கள் தொடர்பு முகாம்களில் வழங்கப்படுகிறது.


இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்றைய தினம் 75 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களும் மற்றும் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்களும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,  அவர்கள் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நிண்டநாள் கோரிக்கையான மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடி சாலையின் இடையே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 800 மீட்டர் மண்சாலையை ஜல்லி தார்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என சட்டமன்ற உறுப்பினர், கூடுதல் ஆட்சியர், வனத்துறை, வருவாய் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் நேரடியாக கள ஆய்வு செய்தார்.


இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.இரா.காயத்ரி, நல்லம்பள்ளி ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திரு.சசிகுமார், திருமதி.புனிதம் பழனிசாமி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திருமதி.தி.தனப்பிரியா, மகளிர் திட்ட இயக்குனர் திரு. பத்ஹூ முகம்மது நசீர், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) திரு.குணசேகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.மு.பார்வதி, மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.தனலட்சுமி குணசேகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.சாந்தா வெங்கடப்பன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad