கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆறு வழியாக உபரி நீர் அதிகப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுளுவில் நேற்று முதல் படிப்படியாக அதிகரித்தது. இன்று காலை வரை வினாடிக்கு 21,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மெயின் அருவி, ஐந்தருவி சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றன. மேலும் காவிரி ஆற்றிற்கு வரும் நீர் வரத்தை தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்ந்து நீடித்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக