தருமபுரி ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 29 ஜூலை, 2024

தருமபுரி ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித் தன்னார்வலர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.


தருமபுரி ஒன்றிய இல்லம் தேடிக் கல்வித்  தன்னார்வலர்களுக்கான வட்டார அளவிலான பயிற்சி 2024 ஜூலை 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியை தருமபுரி வட்டார வள மைய மேற்பார்வையாளர் முல்லைவேந்தன் துவக்கி வைத்தார்.


கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்கள் கொண்டு தினசரி 1 முதல் 1:30 மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடிக் கல்வி எனும் தொலைநோக்குத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சர் கடந்த அக்டோபர் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தற்போது 2024- 25 ஆம் கல்வியாண்டில் தருமபுரி ஒன்றியத்தில் உள்ள 135 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயலாற்றிய 311 தன்னார்வலர்களைக் கொண்டு 2024 ஜூலை 2, அன்று சார்ந்த பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான  இல்லம் தேடிக் கல்வி  மையங்கள் தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் துவக்கி வைக்கப்பட்டது. இம்மையங்களில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கான சிறப்பு பயிற்சி ஜூலை 28, 29 ஆகிய தேதிகளில்  இரண்டு கட்டங்களாக அவ்வையார் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட தன்னார்வலர்களுக்கு தமிழ்,  ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கான  முதல் பருவக் கையேடுகளைக் கொண்டு  எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறையில் தங்கள் மையத்துக்குட்பட்ட மாணவர்களுக்கு  கற்பிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டன.


தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை  பாடல்கள், உரக்க படித்தல், வார்த்தை அட்டைகள், வாக்கிய அட்டைகள், குழுச் செயல்பாடு, மற்றும் தனிநபர் செயல்பாடு  மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட கற்றல் உக்திகளைக் கையாளவும் கணிதத்தில் எண்களை அறிதல், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படைச் செயல்பாடுகளை கற்பித்து  மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் மாணவர்களின் கற்றல் அடைவை அறிந்திடும் வகையில் ஒவ்வொரு அலகு இறுதியிலும் OMR தாளைக் கொண்டு மதிப்பீடு  செய்யவும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெருமாள் மற்றும் நாகேந்திரன்  ஆகியோர் இப்பயிற்சியை பார்வையிட்டு மாணவர்களின் திறனை மேம்படுத்த தன்னார்வலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இப்பயிற்சிக்கான  கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் அருண்குமார், முனியப்பன், மோகன் மற்றும் ஆசிரியர் ஜெயராமன் ஆகியோர் செயல்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad