படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் - விண்ணப்பிக்க அழைப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 ஜூலை, 2024

படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் - விண்ணப்பிக்க அழைப்பு.


தமிழக அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.  இதன்படி மாதம் ஒன்றுக்கு பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-ம்,  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-ம், மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) படித்தவர்களுக்கு ரூ.400/-ம், பட்டதாரிகளுக்கு ரூ.600/-ம் வழங்கப்பட்டு வருகிறது.  

மாற்றுத் திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600/-ம், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000/-ம் வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டத்தில் 30.09.2024 உடன் முடிவடையும் காலாண்டிற்கு கீழ்கண்ட தகுதியுடைய படித்த பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.


மேற்கண்ட  கல்வித் தகுதியினை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். பட்டியலின பிரிவினருக்கு 01.07.2024 அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.72,000/-க்கு மிகையாமல் இருக்கவேண்டும். 


மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்சவரம்பு மற்றும் வருமான உச்சவரம்பு இல்லை. விண்ணப்பதாரர் பள்ளி,கல்லூரியில் நேரிடையாக படித்துக்கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் மற்றும் இது போன்ற தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அரசு/தனியார் துறையில் இருந்து எவ்விதமான ஊதியம் பெறும் பணியில் இருந்தவர்கள்/இருப்பவர்கள் இவ்உதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள். மேலும் தற்பொழுது எந்த துறையின் வாயிலாகவும் உதவித்தொகை பெற்றுக் கொண்டிருக்கக்கூடாது.


இவ் உதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பதிவுதாரர்கள் தருமபுரி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்gfறும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலிருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட  வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் 30.08.2024 க்குள் விண்ணப்பத்தினை தர்மபுரி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அளித்திடுமாறும் மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவுபெறாது சுய உறுதிமொழி ஆவணம் அளிக்காதவர்கள், 30.08.2024 க்குள் சுய உறுதிமொழி ஆவணத்தை அளித்து தொடர்ந்து உதவித்தொகை பெற்று பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad