தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் சூரிய ஒளி குளிர்பதன அறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (02.07.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், ஏ.ஜெட்டிஅள்ளி உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கான சிறப்பு அங்காடி, விவசாயிகளுக்கான கடைகள், கழிவறை வசதிகள், தூய்மை பணிகள், ஆழ்துளை கிணறு, குடிநீர் வசதி உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, உழவர் சந்தை வழித்தடம் பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சீரமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், உழவர் சந்தையில் உள்ள சூரிய ஒளி குளிர் பதன அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளின் விளைப்பொருட்கள் தகுந்த நேரத்தில் பதப்படுத்தி, சந்தைபடுத்த போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். தடங்கம் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அலுவலகத்தில் பராமரிக்கபடும் பதிவேடுகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, இண்டூர், பங்குநத்தம் கிராமத்தில் தொல்லியல் துறையின் சார்பில் பாதுகாக்கப்பட்ட சின்னங்களான பெரும் கற்கால சின்னங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, தருமபுரி கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) திருமதி.மகேஸ்வரி, உதவி ஆணையர் (ஆயம்) திருமதி.நர்மதா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் திரு.மு.இளங்கோவன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திருமதி.பார்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக