தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் தலைமையில் இன்று (12.07.2024) நடைபெற்றது.
உலக மக்கள் தொகை 1987-ம் ஆண்டு ஜுலை மாதம் 11-ம் நாள் 500 கோடியை கடந்துவிட்டதை குறிக்கும் வகையிலும், மக்கள்தொகை அதிகரிப்பு அபாயம் குறித்து உலக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஜுலை மாதம் 11-ம் நாளை "உலக மக்கள் தொகை தினம்" என்று அறிவித்தது. பெருகி வரும் மக்கள் தொகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற ஆண்டுதோறும் ஜூலை 11-ம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு "தாய் மற்றும் சேய் நல்வாழ்வுக்கு சரியான வயதில் திருமணமும் போதிய பிறப்பு இடைவெளியும் சிறந்தது” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக, தருமபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது. மேலும், குடும்பநல முறைகளை பற்றிய விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியினை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் நர்ஸிங் கல்லூரியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, மக்கள் தொகை விழிப்புணர்வு பலகைகளுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியானது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் நர்ஸிங் கல்லூரி வரை சென்றடைந்த்து.
இப்பேரணியில் பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது. பின்பு உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் நர்ஸிங் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் வழங்கினார். மேலும், மரக்கன்றுகளை அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) திரு.வேடியப்பன், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட குடும்பநல துணை இயக்குநர் மரு.பாரதி, துணை இயக்குநர் (காசநோய்) மரு.பாலசுப்ரமணியம், துணை இயக்குநர் (தொழுநோய்) மரு.புவனேஸ்வரி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் (பொ) மரு.உமா, எய்ட்ஸ் மற்றும் கட்டுபாட்டு அலுவலகம் மாவட்ட மேற்பார்வையாளர் திரு.உலகநாதன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் திரு.ம.ஆறுமுகம், அரசுத்துறை அலுவலர்கள், தாளாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் கல்ஜாரி விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக