பாலக்கோடு பேருந்து விபத்தில் காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஜூலை, 2024

பாலக்கோடு பேருந்து விபத்தில் காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்றைய தினம் (15.07.2024) எதிர்பாராதவிதமாக இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்து, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் நேற்றைய தினம் (15.07.2024) எதிர்பாராதவிதமாக இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்து, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.07.2024) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டம். பாலக்கோட்டில் இருந்து நேற்று (15.07.2024) மாலை மாரண்டஅள்ளி சென்று கொண்டு இருந்த ஒரு தனியார் பேருந்து மற்றும் வெள்ளிச்சந்தையில் இருந்து பாலக்கோடுக்கு வந்து கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்து ஆகியவை பாலக்கோடு வட்டம், ஜெர்த்தலாவ் கிராமம், பாரதியார் நகர் அருகில் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 88 நபர்கள் காயமடைந்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 


அவர்களில் 25 நபர்கள் எலும்பு முறிவு மற்றும் பல் உடைந்தும் பலத்த காயமடைந்தனர். 42 நபர்கள் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றி தகவல் தெரிந்தவுடன், தருமபுரி மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை பணியாளர்கள் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனை மற்றும் அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் அனுப்பி வைத்தனர்.


தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த சாலை விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்ததோடு, பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.


இந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளவர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், லேசான காயமடைந்தவர்களும் உரிய சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர் அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவக்குழுவினர் சிறந்த முறையில் சிகிச்சை வழங்கி வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இந்த நிகழ்வின்போது, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, உள்ளிருப்பு மருத்துவர் மரு.நாகேந்திரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.சிவக்குமார், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad