தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய தூய்மை பணியாளர் நல ஆணையம் (Safai Karamchari) குறித்த ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் மாண்புமிகு திரு.எம்.வெங்கடேசன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (04.07.2024) நடைபெற்றது.
தேசிய ஆணையத்தலைவர் மாண்புமிகு திரு.எம்.வெங்கடேசன் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் நலனும், அவர்களின் ஆரோக்கியமும் மிக மிக முக்கியம். இதனை கருத்தில் கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்தி உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் பல்வேறு காப்பீட்டு திட்டங்களின் தூய்மை பணியாளர்களை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் நேரடியாக வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரசு வழங்கும் ஊதியம் முழுமையாக சென்றடைகிறதா என்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் தூய்மைப்பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதால்தான் நாடும், நகரமும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தூய்மை பணியாளர்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி அவர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித்தர வேண்டும். மேலும், தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தலைவர் திரு.எம்.வெங்கடேசன் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, தேசிய ஆணையத் தலைவர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில், ஒரு பணியாளருக்கு தொகுப்பூதியத்தில் தற்காலிக இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணையும், தருமபுரி நகராட்சியில் ஓய்வு பெற்ற 2 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூபாய் 6 இலட்சத்து 48 ஆயிரம் வீதம் ரூபாய் 12 இலட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் வழங்கினார்.
முன்னதாக, தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் அவர்கள் தருமபுரி நகராட்சி, பென்னாகரம் சாலை, குமாரசாமி பேட்டையில் தூய்மை பணியாளர் குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்று தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்து, பணியாளர்களது இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர், தனித்துணை ஆட்சியர் திருமதி.தனப்பிரியா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.சாந்தி, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.கணேசன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.புவனேஷ்வரன், அரசுத்துறை உயர் அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக