தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை 6 மாதங்களில் வாகன தணிக்கையில் ரூ.1,79,05,005/- வசூல் - மாவட்ட போக்குவரத்து அதிகாரி தகவல் . - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 அக்டோபர், 2024

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை 6 மாதங்களில் வாகன தணிக்கையில் ரூ.1,79,05,005/- வசூல் - மாவட்ட போக்குவரத்து அதிகாரி தகவல் .


தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை 6 மாதங்களில் போக்குவரத்து துறையின் சார்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.த.தாமோதரன் அவர்கள் தலைமையில், தருமபுரி பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.இரா.பாலசுப்பரமணியன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலவக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.அ.க.தரணீதர், பாலக்கோடு பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.கு.வெங்கிடுசாமி, அரூர் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.குலோத்துங்கன் ஆகியோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அதில், 9281 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 3389 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக காலாண்டு வரி செலுத்தாமல் இயக்குதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று புதுப்பிக்காமல் இயக்குதல், அனுமதி சீட்டு இல்லாமல் இயக்குதல் போன்ற குற்றங்களுக்காக 400 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மேலும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதாக 200 வாகனங்களுக்கும், அதிக பாரம் ஏற்றிச்சென்ற 116 வாகனங்களுக்கும், அனுமதீச்சீட்டு இல்லாமல் இயக்கிய 113 வாகனங்களுக்கும், அதிவேகமாக வாகனங்களை இயக்கிய 1243 வாகனங்களுக்கும், தகுதிச்சான்று பெறாமல் இயக்கிய 216 வாகனங்களுக்கும், காப்புச்சான்று/புகைச்சான்று இல்லாமல் இயக்கிய 610 வாகனங்களுக்கும், சிகப்பு நிற பிரதிபலிப்பான் இல்லாமல் இயக்கிய 388 வாகனங்களுக்கும் மற்றும் சிகப்பு எச்சரிக்கை விளக்கு இல்லாமல் இயக்கிய 232 வாகனங்களுக்கும் வாகன தணிக்கையின் பொழுது அபராதம் விதிக்கப்பட்டது.


மேற்கண்ட வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.50,84,128/- (ரூபாய் ஐம்பது லட்சத்து எண்பத்திநான்காயிரத்து நூற்று இருபத்து எட்டு மட்டும்) மற்றும் இணக்க கட்டணமாக ரூ.38,92,726/- (ரூபாய் முப்பற்றுஎட்டு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து எழுநூற்றுஇருபத்தி ஆறு மட்டும்) ஆக மொத்தம் ரூ.89,76,854/- (ரூபாய் எண்பத்தி ஒன்பது லட்சத்து எழுபத்தி ஆறாயிறத்து எண்ணூற்று ஐம்பத்தி நான்கு மட்டும்) உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், இந்த வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ.89,28,151/- (ரூபாய் எண்பத்தி ஒன்பது லட்சத்து இருபத்து எட்டாயிறத்து நூற்று ஐம்பத்தி ஒன்று மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டது.


கடந்த ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 மாதம் வரை 6 மாதங்களில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்க பணிகள் மூலம் அரசுக்கு மொத்தம் ரூ.1,79,05,005/- (ரூபாய் ஒரு கோடியே எழுபத்து ஒன்பது லட்சத்து ஐந்தாயிரத்து ஐந்து மட்டும்) வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், தொப்பூர் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேகவரம்பான 30 கி.மீ-க்கு மேல் இயக்கப்படும் வாகனங்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் வேகம் கண்காணிக்கும் கருவி (Speed Radar Gun) உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 13,954 வாகனங்களுக்கு e-Challan மூலம் ரூ.1,04,58,925/- (ரூபாய் ஒரு கோடியே நான்கு லட்சத்து ஐம்பத்தி எட்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி ஐந்து மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad