தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கேசர்குளிடேம் அருகே உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் 80 குடும்பங்களை சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாததால் வேறு பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புக்கள் கட்டித் தர நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்திருந்தனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று கேசர்குளிடேம் அருகில் உள்ள சாமன்கொட்டாய் பகுதியில் புதிய குடியிருப்புக்களை கட்டிய தமிழக அரசு இப்பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், சுடுகாடு உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் கடந்த மார்ச் மாதம் அவசரகதியில் இலங்கை அகதிகளை இம்முகாமில் குடியமர்த்தினர்.
கடந்த ஏழு மாதங்களாக இது குறித்து பல முறை தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை விடுத்தும் அரசு எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, மாறாக இவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் எதிலும் ஈடுபடாமல் பார்த்து கொண்டது.
தற்போது இம் முகாமை சேர்ந்த ரூபன் (55) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார், இவரது உடலை அடக்கம் செய்ய இடம் இல்லை, பழைய முகாமில் உள்ள சுடுகாட்டிற்க்கும் கொண்டு செல்ல வழியில்லாததால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாததால் சுடுகாடு கேட்டு பாலக்கோடு - கேசர்குளிசாலையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார், தாசில்தார் ரஜினி மற்றும் பொதுமக்களுடன் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதான பேச்சுவார்த்தையை ஏற்று சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக