தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப. அவர்கள் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை செயலாக்க கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை செயலாக்க கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் இன்று (24.01.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- பொது தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். காலாண்டு தேர்வு காட்டிலும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. பாராட்டுக்குரியது.
பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நாளை நடைபெறும் முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் தருமபுரி மாவட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4536 பேர் எழுத உள்ளனர். இந்த மாணவர்களுக்கு தேவையான சிறப்பு பயிற்சிகள் பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இது போன்ற திறனறி தேர்வுகளில் மாணவர்களை அதிக அளவில் பங்கேற்கச் செய்ய தலைமை ஆசிரியர்கள். ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை: பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வங்கிகளில் மாணவர்களின் சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகள் தொடங்குதல், மாணவர்களின் முறையான ஆதார் பதிவுகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஐ. ஜோதிசந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் திரு.சாகுல் ஹமீத், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக