வாழைத்தோட்டம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 20 பிப்ரவரி, 2025

வாழைத்தோட்டம் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை.


தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள தளி, தேன்கனிக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப் பகுதிகளில் உள்ள வன விலங்குகள் உணவு தேடி அவ்வப்போது கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகம் என்பவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார், நேற்று முன்தினம் திங்கட்கிழமை  அதிகாலை 2 மணிக்கு மூன்று சிறுத்தைகள் அப்பகுதிக்கு வந்ததாக கூறப்படுகின்றது, அதில் ஒரு  சிறுத்தை, விநாயகம் வீட்டின் முன்பு உறங்கி கொண்டிருந்த இரு நாய்களில் ஒரு நாயை வேகமாக வந்து கவ்விச்சென்றது. இதில் மற்றொரு நாயின் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது சிறுத்தை நாயை கவ்வி சென்றது தெரியவந்தது. 


இக்காட்சி  வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. சிறுத்தை வீட்டின் வெளியே உறங்கி கொண்டிருந்த நாயை கவ்வி செல்லும் காட்சி  பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பாலக்கோடு வனத்துறையினர் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை கண்கானித்து வருகின்றனர். மேலும் வாழைத்தோட்டம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.


இதுகுறித்து பாலக்கோடு வனசரக அலுவலர் நடராஜ் கூறுகையில் வாழைத்தோட்டம், ஜோடி சுனை பகுதியில் விவசாயி வீட்டின் முன்பிருந்த நாயை சிறுத்தை  கவ்வி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிறுத்தைகள் சுற்றி வருவதாக பொதுமக்கள் தெரிவித்ததையடுத்து  தொடர்ந்து 3வது நாளாக  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.


பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad