தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12-ஆம் வகுப்பு) அரசு பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் (03.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சென்னை அரசுத் தேர்வுகள் துறையால் நடப்பு கல்வியாண்டில் (2024-25) அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இரண்டாமாண்டு அரசு பொதுத் தேர்வுகள் இன்று (03.03.2025) முதல் 25.03.2025 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12-ஆம் வகுப்பு) அரசு பொதுத்தேர்வை 103 அரசு பள்ளிகள், 4 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 3 அரசு உண்டு உறைவிடப்பள்ளிகள், ஒரு சமூக நல பள்ளி 65 தனியார் பள்ளிகள் என 177 பள்ளிகளைச் சேர்ந்த 9,365 மாணவர்கள் 9971 மாணவிகள் என 19,336 பேர் இன்று எழுதுகின்றனர்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12-ஆம் வகுப்பு) அரசு பொதுத்தேர்வு நடைபெறும் 83 தேர்வு மையங்களில் 3,500 ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாணவ, மாணவியர்களும் இத்தேர்வினை உண்மையாகவும், நேர்மையாகவும், எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத வேண்டும் எனவும், இத்தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுமையாக மேற்கொள்வதோடு, எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதிசந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக