தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ. பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., மற்றும் சேலம் பகுப்பாய்வு கூடம் நடமாடும் பகுப்பாய்வு வாகன பொறுப்பாளர் முதுநிலை பொது பகுப்பாய்வாளர். திரு.நரசிம்மன் அவர்கள் ஏற்பாட்டின்படி, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மற்றும் சேலம் உணவு பகுப்பாய்வு கூட ஆய்வக இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திக், வாகன ஓட்டுனர் ரகுநாதன் உள்ளிட்ட குழுவினர், பாரத ரத்னா புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, உணவு பொருட்களில் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட் லேபில்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து நேரடி செயல் விளக்கமும், காணொளி காட்சிகள் வழியாகவும் விழிப்புணர்வு பிரசுரங்களும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் மைக்ரோபயாலிஸ்ட் மருத்துவர் நளினி, பேராசிரியர் பத்மப்பிரியா மற்றும் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் பாபு உள்ளிட்டோர் முன்னிலையில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு )முனைவர் திரு.தீர்த்தலிங்கம் அவர்கள் தலைமையில், கல்லூரி மாணவ,மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் பார்வையில் நடைபெற்றது.
நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் முன்னிறுத்தி அதில் உள்ள எல்.இ.டி. தொடு திரை வழியாக உணவு பாதுகாப்பு குறித்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் குறித்தும், தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள் குறித்தும் காணொளி காட்சி வழியாக திரையில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், உணவுப் பொருட்களைக் கொண்டு குறிப்பாக தேயிலை, தேன், நெய், பச்சை பட்டாணி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் கலப்படம் கண்டறிதல் குறித்தும், அயோடின் உப்பு, அயோடின் இல்லாத உப்பு வேறுபாடுஅறிதலுடன் அயோடின் நுண்ணூட்டச் சத்து அவசியம் குறித்தும், செறி ஊட்டப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்தும், பொட்டலம் இடப்பட்ட பாக்கெட் உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்களான உணவு பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிம எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், அலர்ஜி தன்மை, சைவ அசைவ குறியீடு, நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்டவை காணுதல் குறித்தும் நேரடியாக உணவுப் பொருட்களைக் கொண்டு செயல் விளக்கம் செய்தனர்.
நிகழ்ச்சி இறுதியில் போதைப் பொருட்கள் தவிர்ப்பது, தடுப்பது குறித்தும், கண்டால் புகார் தெரிவிக்க வேண்டியது குறித்து எடுத்துரைக்கப்பட்டது மேலும் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, மாதம்பட்டி, புலிகரை, புதிய ஹைவே பகுதிகளில் உள்ள மளிகை, பேக்கரிகள், உணவகம், தாபா, டீக்கடைகளில் இருந்து தேயிலை தூள், பயன்படுத்தும் சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், இனிப்பு மற்றும் காரங்கள் உள்ளிட்ட உணவு மாதிரிகள் சேர்க்கப்பட்டு, வாகனத்தில் பரிசோதித்து பரிசோதனை முடிவில் உடன் உரிய நடவடிக்கை சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது மேற்கொள்ளப்படும்.
விழிப்புணர்வு தொடர்ச்சியாக மாவட்டம் முழுதும் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக