தர்மபுரி பஸ் நிலையத்தில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்த உணவுபாதுகாப்புத்துறையினர் பகுப்பாய்வு வாகனம் மூலம் பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா மேற்பார்வையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு கலப்படம் குறித்து செய்முறை விளக்கங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன், உணவு பாதுகாப்பு அலுவலர் அருண்குமார், உதவி உணவு பகுப்பாய்வாளர் கார்த்திக் ஆகியோர் பொதுமக்களிடம் உணவு பாதுகாப்பு மற்றும் உணவில் கலப்படம் கண்டறிவது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில், நெய், தேன், பால், டீத்தூள் ஆகியவற்றில் கலப்படம் செய்திருப்பதை எளிய முறையில் கண்டறிவது, சோம்பு, பருப்பு, அரிசி, மிளகு ஆகியவற்றில் கலப்படம் உள்ளதா என கண்டறியும் முறை ஆகியற்றிற்கு விளக்கம் அளித்தனர்.
இதே போல், சமையல் எண்ணெய்யை ஒரு முறைதான் பயன்படுத்த வேண்டும். மறுசுழற்சியாக சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதிக கலர் பயன்படுத்திய உணவு பொருட்களை உண்ணக்கூடாது என்றும் அதனால் ஏற்படும் குடல் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர். மேலும் உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு வாகனத்தின் டிவியில் வீடியோ காட்சிகளை திரையிட்டு பாதுகாப்பான உணவு சாப்பிடும் முறை அவற்றை கலப்படம் இன்றி வாங்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். மேலும் பஸ்நிலைய டீக்கடைகளில் உணவு, பால் போன்றவற்றின் மாதிரியை உடனடியாக பகுப்பாய்வு செய்து அதன் தரத்தை கண்டறிந்தனர், முன்னதாக புறநகர் பஸ்நிலையத்தில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 20 கடைகளில் நடத்திய சோதனையில் 10 கடைகளில் முகவரி இல்லாத கூல்டிரிங்ஸ், பிரட், முறுக்கு, சிப்ஸ், கடலை, எள்ளு உருண்டை பொருட்களை விற்றதற்கும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்ததற்கும் என 10 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் 50 கிலோ காலாவதி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உணவு பொருட்களை எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கோ, காலாவதியான பெருட்களையே விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக