தருமபுரி மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய 31.03.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப்பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர்சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்குத்திட்டம் (AgriStack) செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது, விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைபேசி எண், நிலஉடைமை விவரங்களையும் விடுபாடின்றி இணைக்கும் பணி சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விவசாயிகள் பொது சேவை மையம் (CSCs) சென்று அங்கும் நிலஉடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர் அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படுத்தப்படும்.
2025-26ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டம் (PMKISAN), பயிர்க்காப்பீடுத் திட்டம் (PMFBY) போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெற தேசிய அளவிலான தனித்துவ அடையாள எண் மிகவும் அவசியம். எனவே, விவசாயிகள் தங்களது கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை அலுவலர்களால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரடியாகச்சென்று தங்கள் நிலஉடைமை விவரங்கள், ஆதார், கைபேசி எண் ஆகிய விவரங்களை அளித்து எவ்வித கட்டணமுமின்றி 31.03.2025 ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக