விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு – தமிழ்நாடு அரசு விளையாட்டு விடுதியில் சேர்க்கை விண்ணப்பங்கள் அறிவிப்பு!. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஏப்ரல், 2025

விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்பு – தமிழ்நாடு அரசு விளையாட்டு விடுதியில் சேர்க்கை விண்ணப்பங்கள் அறிவிப்பு!.


தருமபுரி, ஏப்ரல் 23:

விளையாட்டுத் துறையில் மாணவ, மாணவியர்கள் உயர்ந்த அளவில் சாதனைகள் செய்யும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) கீழ் செயல்பட்டு வரும் 28 விளையாட்டு விடுதிகளில், 2025–2026ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 7ம், 8ம், 9ம் மற்றும் 11ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் மே 5ஆம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பதாரர்களுக்கான மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் மே 7 (ஆண்கள்), மே 8 (பெண்கள்) ஆகிய தேதிகளில் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்) உள்ளிட்ட விளையாட்டுகளில் தேர்வுகள் நடைபெறும்.


மாவட்டத் தேர்வில் தேர்வாகும் மாணவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தேர்வாகுவர். மே 12 மற்றும் 13ஆம் தேதிகளில், சென்னை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரி, திருச்சி ஆகிய இடங்களில் ஜுடோ, வாள்சண்டை, பளுதூக்குதல், குத்துசண்டை, நீச்சல், ஹேண்ட்பால், டேக்வாண்டொ, ஸ்குவாஷ், மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் மாநிலத் தேர்வுகள் நடைபெறவுள்ளன.


விளையாட்டுத் தகுதியாக, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்றுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். குடியரசு தின, பாரதியார் தின, SGFI மற்றும் இந்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகரித்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


மேலும் விவரங்களுக்கு 9514000777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப. தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad