தருமபுரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஏப்ரல், 2025

தருமபுரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு நிகழ்வு.


தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு (Career Guidance) ஆலோசனை நிகழ்வு நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இதுகுறித்து தெரிவித்ததாவது: அரசு பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்வு நடத்தப்படுகிறது.


இந்த நிகழ்வு தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் வருகின்ற 05.04.2025 அன்று காலை 9.00 முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். நிகழ்வில் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.


தருமபுரி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிகழ்விற்கு வருகை தரும் மாணாக்கர்கள் தங்களது EMIS எண் விவரத்தினை கொண்டு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இதற்கான தகவலை வெளியிட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad