தர்மபுரி, ஏப்ரல் 16: தர்மபுரி நகராட்சி குமாரசாமிபேட்டை அப்பாவுநகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விருந்தாடியம்மன் திருக்கோயிலில் புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு மங்கள இசையுடன் விநாயகர் வழிபாடு, தேவதா எஜமானர் சங்கல்பம், புன்னியாக வாசனம், கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை ஆகிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து, கோயில் நிர்வாகத்தினரின் தலைமையில் ஆண்கள் மற்றும் பெண்கள் கங்கனம் கட்டி புனித பூஜைகளில் ஈடுபட்டனர்.
இன்று காலை, பென்னாகரம் ஆலமரத்து விநாயகர் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை இசையுடன் ஏராளமான பெண்கள் பால்குடம், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்துச் சென்று, முக்கிய வீதிகள் வழியாக குமார் காலனி உள்ள விருந்தாடியம்மன் ஆலயத்திற்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.
ஊர்வலத்தில் பெண்கள் வெகுவாக பங்கேற்று, பக்திபரவசத்துடன் ஆலயத்தில் இறை வணக்கம் செலுத்தினர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, பால கணபதி பூஜை, கும்பலங்காரம், கலாகர்ஷணம் மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.
நாளை ஏப்ரல் 17ஆம் தேதி காலை நிகழ்வுகள் தொடங்கவுள்ளன. இதில் மங்கல இசை, கோ பூஜை, இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தனம், திரவியம் ஹோமம், மஹாபூர்ணாகுதி, யாத்ராதானம், தீபாராதனை மற்றும் கடம்புறப்பாடு நடைபெறும். காலை 9 மணி முதல் 11 மணி வரை மூலவருக்கான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை, தசதரிசனம், மாங்கல்ய தாரணம், தீபாராதனை ஆகிய நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்ற இந்த விழா, பக்தி உற்சாகத்தையும், சமூக ஒற்றுமையையும் ஏற்படுத்தியது. கோயில் நிர்வாகம் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததோடு, பாதுகாப்பு மற்றும் சுகாதார அம்சங்களையும் உறுதி செய்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக