விவசாய நிலம் வழங்கிய விவசாயி கண்ணீர்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

விவசாய நிலம் வழங்கிய விவசாயி கண்ணீர்: நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள மாரண்டஅள்ளி அடுத்த வட்டகானம்பட்டியை சேர்ந்த விவசாயி பொன்னப்பன் (67) தனது நிலம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார்.


2004ஆம் ஆண்டு, வட்டகாணம்பட்டி முதல் நாராயாணன் கொட்டாய் வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராம சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், பொன்னப்பனிடம் சாலை அமைக்க சுமார் 50 சென்ட் பட்டா நிலம் வழங்குமாறு கோரினர். அதற்கு மாற்றாக அருகே உள்ள 25 சென்ட் புறம்போக்கு நிலத்தை தருவதாக உறுதியளித்தனர்.


அதனை ஏற்று, விவசாயி பொன்னப்பன் 50 சென்ட் விவசாய நிலத்தை சாலை அமைப்பதற்காக வழங்கினார். அதன்பின், புறம்போக்கு நிலத்தை சீரமைத்து விவசாயம் செய்து வந்தார். பின்னர், அந்த நிலத்திற்கு பட்டா கோரி பொன்னப்பன் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தார்.


பட்டா வழங்கப்படாததால், விவசாயி பொன்னப்பன் உரிமைக்காக நீதிமன்றத்தை நாடினார். வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அமானிமல்லாபுரம் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தூண்டுதலின் பேரில், பொன்னப்பன் விவசாயம் செய்து வந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி மீட்க வந்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.


அதிகாரிகள் அளவீடு செய்வதற்காக விவசாய பயிர்களை மிதித்து நாசமாக்கியதாகவும், விவசாயியின் நிலம் மீட்கப்பட்டதாகவும் விவசாயி பொன்னப்பன் வேதனையுடன் கூறுகிறார். விவசாய நிலம் அளித்த விலை விவசாயிக்கு கண்ணீரானது. "நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நிலத்தை மீட்க முயல்வது முறைகேடு. நான் எந்தவித சட்ட ரீதியிலான தவறும் செய்யவில்லை. தமிழக முதல்வர் உரிய நியாயத்தை வழங்க வேண்டும்" என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார் விவசாயி பொன்னப்பன்.


விவசாய நிலம் வழங்கிய விவசாயிக்கு உரிய நியாயம் கிடைக்கப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad