மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது – 500 கிராம் கஞ்சா பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது – 500 கிராம் கஞ்சா பறிமுதல்.


மரண்டஹள்ளி, ஏப்ரல் 17: தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் கஞ்சா போன்ற மத்தேய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர் என்ற புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த நிலையில், மாரண்டஅள்ளி போலீசாருக்கு இது தொடர்பான இரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாரண்டஅள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.


அந்த நேரத்தில், மாரண்டஅள்ளி நான்கு ரோடு அருகே ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமாக கையில் பாலித்தீன் கவர் ஒன்றுடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அவர் தப்பிச் செல்ல முயன்றார். உடனடியாக போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை தாலுகா, தேர்பேட்டை பகுதியில் வசிக்கும் சஞ்சய் (வயது 20) எனவும், இவர் கடந்த சில நாட்களாக தர்மபுரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்தது.


பின்னர் போலீசார் அவர் வைத்திருந்த பையில் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து, மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர் பின்னணியில் உள்ள தொடர்புகளை கண்டறியும் வகையில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகமாக இருக்கும் மாரண்டஅள்ளி பகுதிகளில் மதுவிலக்குப் பிரிவும் சேர்ந்த போலீசாரால் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad